மாமனாரை ஏமாற்ற ரூ.40 லட்சம் கொள்ளை போனதாக நாடகம்; கேரளாவில் கில்லாடி மாப்பிள்ளை கைது

3


கோழிக்கோடு: கேரளாவில் மாமனாரை ஏமாற்றுவதற்காக, ரூ.40 லட்சம் கொள்ளை போனதாக நாடகம் நடத்திய நபரின் செயல் போலீசார் விசாரணையில் அம்பலம் ஆனது.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள அனக்குழிக்கரையைச் சேர்ந்தவர் ரஹீஸ், 35. இவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் மாமனாரிடம் பல சந்தர்ப்பங்களில் பணம் பெற்று இருந்தார். அந்த பணத்தை திருப்பி தரும்படி மாமனார் கேட்டுள்ளார். பணத்தை செலவழித்து விட்ட ரஹீஸ் தனது மாமனாரிடம் ஏமாற்றுவதற்கு ஒரு சாக்குப் போக்கை கண்டுபிடிக்க முடிவு எடுத்தார்.



இதையடுத்து, ரஹீஸ் மார்ச் 20ம் தேதி, பூவாட்டுபரம்பாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் வைத்திருந்த ரூ.40 லட்சம் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். திருடர்கள் காரின் ஜன்னலை உடைத்து, ஒரு சாக்குப்பையால் மூடப்பட்ட பெட்டியில் வைத்திருந்த ரூ.40 லட்சத்தையும், dashboard இருந்து ரூ.25 ஆயிரத்தையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்றதாகக் கூறினார்.


போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹெல்மெட் அணிந்திருந்த இரண்டு பேர் காரின் முன்பக்க கண்ணாடியை உடைப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் காருக்குள் இருந்த ஒரு சாக்குப்பையை எடுத்துக்கொண்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதன் அடிப்படையில் அந்த பைக்கில் பணத்தை கடத்தி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த நம்பர் பிளேட் போலியானது என்பதைக் கண்டுபிடித்தனர்.


இது தொடர்பாக, ஷாஜி மற்றும் ஜம்ஷித் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரஹீஸ் கூறிதான் இவர்கள் பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. ரஹீஸ் தனது மாமனாருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி தராமல் இருக்க இந்தக் கொள்ளைச் சதித்திட்டத்தை நடத்தியது தெரியவந்தது. பின்னர் போலீசாரிடம் போலி புகார் அளித்த ரஹீஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement