டாஸ்மாக்கில் முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் கைது

நங்கநல்லுார் டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, தகவல் வெளியானது.

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தி.மு.க., அரசை கண்டித்தும், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கைதான போது, டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம் ஒட்டப்படும் என, அறிவித்தார்.

இதையடுத்து, தமிழகம் முழுதும் பா.ஜ., மகளிர் அணியினர் டாஸ்மாக் கடையின் முன் முதல்வர் படத்தை ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில், திருச்சியில் நடந்த பா.ஜ., பொது கூட்டத்தில், டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்டி கைது செய்யப்பட்ட, 90க்கும் மேற்பட்ட பெண்கள், இனி வீரமங்கையர் என அழைக்கப்படுவர் என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஊக்குவித்தார்.

இதையடுத்து, பா.ஜ.,வினர் மீண்டும் முதல்வர் படத்தை டாஸ்மாக் கடையில் ஒட்டுவதை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, நங்கநல்லுார் டாஸ்மாக் கடையில், பா.ஜ.,வை சேர்ந்த மீனாட்சி, 57, தங்க சோபனா, 44, வேதகிரி, 65, வினோத்குமார், 36, ராஜேஷ், 41, செல்வம், 40, ஜெயகுமார், 45, வெங்கடேஷ், 42, ஆகியோர், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி படத்தை ஒட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, எட்டு பேர் மீதும் பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின், பெரும்பாக்கத்தில் உள்ள ஆலந்துார் ஜெ.எம்., - 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களில் மீனாட்சி, தங்க சோபானா, வேதகிரி ஆகியோர் ஜாமினில் வெளிவந்தனர். மற்ற ஐந்து பேரையும், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் சைதாபேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement