சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு அமைச்சர் தம்பி ஆஜராக 'சம்மன்'

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிரான கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரை, ஜூன், 14ல் அமலாக்கத்துறை கைது செய்தது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக, 3,000 பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணங்கள், 120 பக்க குற்றப்பத்திரிகையை, அமலாக்கத்துறை கடந்த ஆக.,12ல் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு, அமலாக்கத்துறை பலமுறை, 'சம்மன்' அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

தற்போது தலைமறைவாக உள்ளார். அசோக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் சண்முகம் ஆகியோருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், கூடுதல் குற்றப்பத்திரிகையை, கடந்த ஜனவரியில் தாக்கல் செய்தார்.

இதில், அசோக்குமார் தவிர்த்து, கூடுதலாக, 10க்கும் மேற்பட்டோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதி எஸ்.கார்த்திகேயன், ஏப்ரல், 9ல் அசோக்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Advertisement