கருகும் பூக்கள்; கவலையில் விவசாயிகள்: முந்திரி, மா, காபி விளைச்சல் சரியும் ஆபத்து

தமிழகத்தில், அரியலுார், கடலுார் மாவட்டம், பண்ருட்டி ஆகிய இடங்களில் முந்திரி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அரியலுாரில் 1.25 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் மற்றும் அரசு வனப்பகுதிகளில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில், உடையார்பாளையம், நாச்சியார்பேட்டை, மணகெதி, செந்துறை, ஆண்டிமடம், தா.பழூர், பொன்பரப்பி, குவாகம். வரதராசன்பேட்டை, தென்னுார், காடுவெட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் முந்திரிக்கு தனிச்சுவை உண்டு.
பருவமழைக்கு பின், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முந்திரி பூத்து மார்ச், ஏப்., மே மாதங்களில் முந்திரி பழங்கள், கொட்டைகள் கிடைக்கும்.
சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, புயல், கடும் வெப்பம், பனிப்பொழிவு போன்ற காரணங்களால் முந்திரி மகசூல் குறைந்து, விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முந்திரி பூக்கள் கருகி வருகின்றன. இதனால் இந்த ஆண்டு முந்திரி மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முந்திரி பருப்புகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும், முந்திரி தோலில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைகளும் பாதிப்படைய நேரிடும். கிராம பகுதிகளில் வேலையிழப்பு ஏற்படுவதுடன், முந்திரி ஏற்றுமதி குறைந்து, அன்னிய செலாவணி ஈட்டும் திறனும் குறைய வாய்ப்புள்ளது. முந்திரிக்கு செய்த செலவுகள் வீணாகி விட்டதே என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
உடையார்பாளையம் விவசாயி பாலு கூறுகையில், ''ஒரு ஏக்கர் முந்திரியில் சராசரியாக 8 மூட்டை கொட்டைகள் கிடைக்கும். ''பூக்கள் கருகி வருவதால், ஏக்கருக்கு 2 மூட்டை கிடைப்பதே கடினம். இந்தாண்டு செலவு செய்த பணம் கிடைக்குமா என தெரியவில்லை,'' என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 90,000 ஏக்கரில் மா சாகுபடி நடக்கிறது. இந்தாண்டு மரங்களில் பூக்கள் பூத்தும், சில மரங்களில் பிஞ்சுகள் காய்த்தும் உள்ளன.வெயில் தாக்கம் அதிகரிப்பால், பிஞ்சுகள், பூக்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த மா விவசாயிகள் போராடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், ''ஏப்., மே மாதங்களில் சீசன் துவங்கும். மா மரங்களில் டிசம்பர், ஜனவரியில் பூக்கள் பூக்கும்.''பனி தாக்கம் குறைந்து வெயில் அதிகரித்துள்ள நிலையில், மண்ணின் ஈரப்பதம் குறைந்து, பூக்கள் பிஞ்சு பிடிக்காமல், உதிரும் நிலையும், பிஞ்சுகள் வெயிலுக்கு வெதும்பி உதிர்வதும் வேதனை அளிக்கிறது,'' என்றார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுாரில் தனியார் எஸ்டேட் மற்றும் சிறு விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக காபி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காபி செடிகளில் மார்ச் ஏப்., மாதங்களில் பூ பூக்கும்; நவ., முதல் ஜன., மாதங்களில் அறுவடை நடக்கும். நடப்பாண்டு எதிர்பார்த்த அளவில் கோடை மழை பெய்யவில்லை.
தற்போது, செடிகளில், காபி பூக்கள் பூத்துள்ளன. சில நாட்கள் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால், மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.உதிரும் காபி பூக்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் கூறுகையில், ''காபி பூ பூத்து, 15 நாட்களுக்கு பின், 25 மி.மீ., கோடை மழை அவசியம். நடப்பாண்டு, பூ பூத்த பின், கோடை மழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால் பூக்கள் கருகி விழும்; மகசூல் பாதிக்கப்படும்,'' என்றார்.
- நமது நிருபர் குழு -
மேலும்
-
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி தர மறுப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு