வாகன ஆக்கிரமிப்பால் திணறும் வைப்பூர் சிப்காட் சாலை

ஸ்ரீபெரும்புதுார்,:ஒரகடம் சிப்காட் சாலையில் இருபுறமும் ஆக்கி ரமித்து நிறுத்தப்படும் தொழிற்சாலை வாகனங்களால், மற்ற வாகனங்கள் செல்ல வழியின்றி சிரமப்படுவதோடு, விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

ஒரகடம் சிப்காட் தொழிற் பூங்காவில் 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் ஒருபகுதியான, வைப்பூர், எறையூர்உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் அதிக மானதொழிற்சாலைகள் உள்ளன.

இந்த சிப்காட் சாலை களின் வழியாகவே, மேற்கூறிய கிராமத்தினர் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிப்காட் சாலையில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு வரும் கன்டெய்னர் லாரி, நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிப்காட் சாலையின் இரண்டு பக்கங்களிலும் வரிசைக் கட்டி நிறுத்தப்படுகின்றன.

சிப்காட் நிறுவனத்தின் வாயிலாக, தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த, கனரக வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட்டும், இவ்வாறு சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், மற்ற நிறுவனங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், வழியின்றி சிரமப்படுகின்றனர்.

மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிடும்போது, சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் மோதி, விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.

ஒரகடம் சிப்காட் ரோந்து போலீசார், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே, சிப்காட் சாலைகளில், ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, சிப்காட் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என, பொதுமக்கள்மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement