விவசாய அடையாள அட்டை பதிவு மார்ச் 31க்கு பிறகும் தொடருமா

விருதுநகர்:தமிழகத்தில் விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 31 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிறகும் பதிவதை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதார் எண் போல் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட பலன்களை பெற தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திடவும் மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி, தமிழகத்தில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு சார்பில் ஒரு சில இடங்களில் நடக்கும் சிறப்புமுகாம்கள் மூலமாகவும், இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்றும் விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார் எண், தொலைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி பதிவு செய்து வருகின்றனர்.

மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வருவாய்த்துறையின் ஒருங்கிணைந்த தரவுகளும் வழங்கப்பட்டால், விடுபடாமல் அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவ எண் வழங்கப்படும்.

நிலத்தை விட்டு வெளியூர் சென்ற பலர் இதில் விடுபட வாய்ப்புள்ளது.மார்ச் 31க்குள் முடிக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இது சாத்தியமில்லை என்கின்றனர் விவசாயிகள். மார்ச் 31 வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என நிர்பந்திக்காமல், அதற்கு பிறகும் பதிய முன்வர வேண்டும் அல்லது காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement