நெல் கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் விவசாயிகள் - 2வது யூனிட் அமைக்க வலியுறுத்தல்

கூடலுார் : கூடலுாரில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால் பல நாட்களாக நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். அதனால் 2வது யூனிட் அமைத்து விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கூடலுாரில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் நடந்து வருகிறது. இரண்டாம் போக நெல் அறுவடை மும்முரமாகியுள்ள நிலையில் மார்ச் 17ல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. அறுவடை துவங்கியதும் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வமுடன் தங்களது நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்து கொள்முதல் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர். தினந்தோறும் இரவு நேரங்களில் இதை பாதுகாக்க முடியாமல் புலம்பி வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல் குவித்து வைப்பதற்கு இடமில்லாத நிலை உருவாகியுள்ளது.தற்போது ஒரு கொள்முதல் நிலைய அதிகாரி மட்டுமே உள்ளதால் ஒரு நாளைக்கு 800 மூடை மட்டுமே கொள்முதல் செய்ய முடிகிறது.

அதனால் மேலும் ஒரு கொள்முதல் நிலைய அதிகாரியை நியமித்து இரண்டாவது யூனிட் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு செய்வதால் ஒரு நாளைக்கு 1600 மூடை கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

Advertisement