தளம் மேற்பரப்பு வழவழப்பாக இருந்தால் மயிரிழையில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு

கா ன்கிரீட் தயாரிக்கும் பரப்பு மேடும், பள்ளமுமாக இல்லாதபடி பார்த்துக்கொண்டால், கான்கிரீட்டை கையாளுவது எளிதாக இருக்கும். கம்பிகளின் மேல் ஏறி நிற்பதால், கம்பி படல் தனது இயல்பான நிலையை விட்டு, சற்று தாழ்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

கம்பிகளின் மேல் கனம் ஏறுவதால், இப்படி ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், கம்பிச் சட்டம் தாழ்ந்து, கான்கிரீட் வலுக்குறைந்து சரிந்துவிடநேரலாம்.

கம்பிப் படலின் மேல் நடக்கும் தொழிலாளர்கள், கவனமாக நடக்க வேண்டும். இயந்திரங்களை நகர்த்திக்கொண்டு போகும்போது, இடையூறு இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கான்கிரீட் தளத்தை போட்ட பிறகு, தளத்தை ஈடுபடுத்துவது மிக முக்கியமானது. இது கான்கிரீட்டின் பலத்தை, குறைந்த செலவில் அதிகப்படுத்தும். விரிசல்கள் தோன்றாமலும் தடுக்கும். கான்கிரீட் கலவை கெட்டியாக இருந்தால், 'காம்பாக்ட்' ஆவதற்கு சற்று கூடுதல் நேரமாகும்.

'இன்போர்ஸ்மென்ட் ஸ்டீல்' போன்றவற்றை, வைப்ரேட்டிங் நீடில் கொண்டு தொடக்கூடாது. அது நீடிலை சேதப்படுத்திவிடும்.

கான்கிரீட் கலவையை அதிகமாக, வைப்ரேட்டிங்(அதிர்வு) செய்யக்கூடாது. இது கான்கிரீட்டின் நீர்ப்பு தன்மையை அதிகமாக்கி, கான்கிரீட்டை ஒழுக வைத்துவிடும்.

கான்கிரீட்டை இடும்போது, மேலே நின்று கொண்டு இருக்கக்கூடிய பணியாளர்களால் கம்பி அமைவு மாறாது பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாற்றாக சரியான இடைவெளியில், தாங்கு கம்பிகளை நுழைத்து வலுக்கூட்ட வேண்டும்.

தளத்தின் மேற்பரப்பு வளவளப்பாக இருக்கக்கூடாது. இதனால் மயிரிழை விரிசல்கள் விழ நேரிடும். ஒரு துடைப்பத்தால் தேய்த்துவிட்டால், பரப்பு சீராகிவிடும். வேலை முடிந்த பின் பிளாஸ்டிக் ஷீட்டினால் மூடிவிட வேண்டும்.

தளத்தை 'பினிஷிங்' செய்யும்போது, ஓரத்தில் இருந்து பினிஷிங் செய்ய ஆரம்பிக்க வேண்டும். மட்டப்பலகையை வைத்து சமன் செய்ய வேண்டும்.

எக்காரணம் கொண்டும் 'எக்ஸ்ட்ரா சிமென்ட்' சேர்க்கக்கூடாது. மரச்சட்டங்களை எடுக்கும்போது தளத்தின் மூலைகளும், முனைகளும் சேதமாகாமல் எடுக்க வேண்டியது அவசியம் என்கின்றார் 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

Advertisement