இ.பி.எஸ்.,க்கு வஞ்சப்புகழ்ச்சியில் நன்றி கூறிய முதல்வர்!

22


சென்னை: 'அமித்ஷாவிடம் இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தியதற்கு இ.பி.எஸ்.,க்கு நன்றி. அடுத்த முறை டில்லி செல்லும் போது வக்பு வாரிய திருத்தம் பற்றிப் பேச வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வக்பு திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்துக்கு அ.தி.மு.க., பா.ம.க., ஆதரவு தெரிவித்தன. இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தனி தீர்மானத்தை கொண்டு வந்தேன். இங்கு எல்லா கட்சி சார்பில், அந்தந்த கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், அதாவது பா.ஜ., வை தவிர, எல்லாரும் வரவேற்று இருக்கிறார்கள். அதற்காக நான் முதலில் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



அதேநேரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அ.தி.மு.க.,விடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை. நேற்று முன்தினம் இதே அவையில் இருமொழி கொள்கை பற்றி பேசும் போது, ஒன்றை சொன்னேன். எதிர்க்கட்சி தலைவர் டில்லிக்கு சென்று இருக்கிறார். யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்து இருக்கிறது என சொன்னேன்.


டில்லியில் நிருபர்கள் கேட்டதற்கு, நான் யாரையும் சந்திக்க வரவில்லை. எந்த அரசியல் நிலையிலும் வரவில்லை. எங்களுடைய கட்சி அலுவலகத்தை பார்வைவிட வந்து இருக்கிறேன் என இ.பி.எஸ்., சொன்னார். மாலையில் பார்த்தால் கார் மாறி, மாறி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து இருக்கிறார். சந்திக்கட்டும். சந்திப்பது தவறு என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அங்க போய், தமிழகத்துக்கு வேண்டிய உரிமை மற்றும் இருமொழி கொள்கை பற்றி பேசி இருக்கிறேன் என சென்னை வந்து இறங்கிய பிறகு நிருபரிடம் சொல்லி இருக்கிறார்.


அதற்காக இந்த அவையின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நன்றி தெரிவிக்கும் அதேநேரத்தில் எப்படி இருமொழி கொள்கை பற்றி வலியுறுத்தி வந்துள்ளேன் என்று சொன்னாரோ, அதேபோல் இந்த பிரச்னையையும் அவர் அடுத்த முறை டில்லி செல்லும் போது வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


பின்னர் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement