போதையில் மட்டையான தொழிலாளி ஆணுறுப்பில் 'நட்டு' மாட்டியது யார்? ஒன்றரை மணி நேரம் போராடி அகற்றம்

திருவனந்தபுரம்: குடிபோதையில், 'மட்டை'யாகிக் கிடந்த தொழிலாளியின் ஆணுறுப்பில் திருகி ஏற்றப்பட்ட நட்டு, டாக்டர்களால் அகற்ற முடியாத நிலையில், தீயணைப்பு துறையினர், 'கட்டர் மிஷின்' பயன்படுத்தி, ஒன்றரை மணி நேரம் போராடி அகற்றினர்.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், காஞ்சாங்காட்டைச் சேர்ந்த 46 வயது தொழிலாளி, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். மூன்று நாட்களுக்கு முன் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். இதில் மயங்கியவர், ரோட்டோரம் மட்டையாகி படுத்தார். மறுநாள் காலை அவர் கண் விழித்தபோது, ஆணுறுப்பில், நட்டு ஒன்று திருகி ஏற்றப்பட்டிருந்தது. அதை அவர் அகற்ற முயன்றார்; முடியவில்லை.
இரு நாட்களாக தொடர்ந்து முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. ஆணுறுப்பில் வலியும், வீக்கமும் அதிகரித்தது. வேறு வழியின்றி காசர்கோடு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மயக்க மருந்து கொடுத்து நட்டை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களாலும் முடியாமல் போனது.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மிக துல்லியமான கட்டர் மிஷினை பயன்படுத்தி, ஒன்றரை மணி நேரம் போராடி நட்டை வெட்டி அகற்றினர். நட்டு வெட்டப்படும் போது ஏற்படும் வெப்பத்தை குறைக்க, தொடர்ந்து ஆணுறுப்பில் தண்ணீரை பீய்ச்சியபடி இருந்தனர்.
நட்டு அகற்றப்பட்ட பின், தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்செய்தி கேரளாவில் பரவி வருகிறது. ஆனாலும், அவரது ஆணுறுப்பில் நட்டு திருகி ஏற்றியது யார் என, இதுவரை தெரியவில்லை.
அவருடன் இணைந்து மது அருந்திய நண்பர்கள் அல்லது வழியில் அவர் விழுந்து கிடந்ததால், வேறு யாரேனும் இந்த படுபாதக செயலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட 'குடி'மகன் போலீசில் புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




