சிவகங்கை பெண் டாக்டரை தாக்கியதும் காட்டேஜ் ஓனரை கொன்றதும் ஒரே நபர்!

8


சிவகங்கை: சிவகங்கை பயிற்சி பெண் டாக்டரை தாக்கிய நபரும், கொடைக்கானல் காட்டேஜ் உரிமையாளரை எரித்துக் கொன்றதும் ஒரே நபர் என, தெரியவந்துள்ளது. அவரை போலீசார் விரட்டி பிடித்ததில் கையில் முறிவு ஏற்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மார்ச் 24 இரவு, 11:00 மணிக்கு பெண் பயிற்சி டாக்டரை ஒருவர் தாக்கினார். அவரை பிடிக்க டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் சிவகங்கை, ஆவரங்காட்டை சேர்ந்த சந்தோஷ், 20, என்பவரை அடையாளம் கண்டு, ஆவரங்காட்டில் பதுங்கி இருந்த அவரை பிடிக்க சென்றனர். போலீசாரை கண்டதும் சந்தோஷ் ஓடிய போது கீழே விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசார் கூறியதாவது: சந்தோஷ் சிறுவயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். பெற்றோர் அவரை அழகர்கோவில் அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொடைக்கானலை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சிவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.



வேலைக்காக ஹோட்டலுக்கு சந்தோஷ் மார்ச் 13ல் நண்பர்களுடன் சென்றார். அங்கு மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து சிவராஜை கொலை செய்து எரித்தார். அங்கிருந்து தப்பிய சந்தோஷ் உள்ளிட்ட நண்பர்கள் சென்னை சென்றனர்.


சிவகங்கை திரும்பிய சந்தோஷ் அன்று இரவு, நேரு பஜாரில் உள்ள பாரில் மது அருந்தினார். இரவு எங்கே செல்வது என்று தெரியாமல் மருத்துவக்கல்லுாரி அருகே துாங்கினார். இரவு, 11:00 மணிக்கு பயிற்சி பெண் டாக்டர் போன் பேசியபடி செல்வதை பார்த்தார்.


அவரது போன், செயின் உள்ளிட்டவற்றை பறிப்பதற்காக அவரை பின்தொடந்த சந்தோஷ் அவரை தாக்கினார். அப்போது டூ வீலரில் யாரோ வருவதை உணர்ந்தவர் அங்கிருந்து தப்பித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement