மருத்துவமனையில் பாலியல் தொந்தரவு: விசாரணை தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் துாய்மை பணியாளர்கள், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அங்கு மேலாளராக பணி புரியும் நபர், துாய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு சமீபத்தில், புகார் அனுப்பப்பட்டது.

புகார் அனுப்பிய நபர், தன்னுடைய பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை.

இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பவானி மேற்பார்வையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழுவினர் மருத்துவமனையில் பணிபுரியும் ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

மொத்தம், 265 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இதுவரை 169 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் அதன் இறுதி அறிக்கை கலெக்டரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமைனை முதல்வர் பவானி தெரிவித்தார்.

Advertisement