லோக்சபா ஒத்திவைப்பு; ராஜ்யசபாவில் ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு

6


புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டித்து, ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.



பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று (மார்ச் 28) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் இரு அவைகளும் கூடியது. லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது.
சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்.பி.,க்கள் கண்டுகொள்ளவில்லை.



தொடர்ந்து கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதேபோல் ராஜ்யசபாவிலும் அவை கூடியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அலுவல் ஆய்வு குழு கூட்டத்திலிருந்து ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.


அவர் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டித்து, அவையில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் ராஜ்யசபா துணை தலைவர் அவையை நடத்தி வருகிறார்.

Advertisement