இதே நாளில் அன்று

மார்ச் 29, 1965

கடலுார் மாவட்டம், ஆடூர் அகரம் எனும் ஊரில், சின்னையா - செங்கேணி அம்மாள் தம்பதியின் மகனாக, 1924, செப்டம்பர் 21ல் பிறந்தவர் விஜயரங்கம் எனும் தமிழ் ஒளி.

புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் பள்ளிப்படிப்பு, வேலுார் மாவட்டம், கலவையில் உயர்கல்வி முடித்தார். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். தான் எழுதும் கவிதைகளை, பாரதிதாசனிடம் படித்துக் காட்டி பாராட்டு பெற்றார்; அவர் சிபாரிசில், தஞ்சை கரந்தை தமிழ் கல்லுாரியில் படித்தார்.

'திராவிட நாடு, குடி அரசு, புதுவாழ்வு' உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். 'வீராயி, விதியோ வீணையோ, தமிழர் சமுதாயம்' உள்ளிட்ட நுால்களை எழுதினார்.

'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் எழுதிய, 'சிற்பியின் காதல்' எனும் நாடகம், 'வணங்காமுடி' எனும் திரைப்படமாக வெளியானது. பூவண்ணன், விந்தன், ஜெயகாந்தன் உள்ளிட்டோர், இவரின் படைப்புகளை பாராட்டினர். தொழிலாளர்களின் ஏமாற்றங்களையும், சிரமங்களையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய இவர், தன் 40வது வயதில், 1965ல், இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement