என்.எஸ்.இ., எடுத்த முடிவால் பி.எஸ்.இ., பங்குகள் உயர்வு

புதுடில்லி:செபியின் ஆலோசனையை தொடர்ந்து, முன்பேர வர்த்தகத்தில், வாராந்திர ஒப்பந்தங்கள் காலாவதியாகும் நாளை, வியாழக்கிழமையில் இருந்து திங்கள் கிழமைக்கு மாற்றும் முடிவை ஒத்திவைப்பதாக, தேசிய பங்குச் சந்தை அறிவித்து உள்ளது.

என்.எஸ்.இ., என்றழைக்கப்படும், தேசிய பங்குச் சந்தை, நடப்பு மார்ச் மாத துவக்கதில் வெளியிட்ட அறிவிப்பில், வாராந்திர ஒப்பந்தங்கள், தற்போது வியாழக்கிழமை காலாவதியாகும் நிலையில், இனி திங்கள் கிழமைக்கு மாற்றப்படுகிறது.

மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு ஒப்பந்தங்களை பொறுத்தவரை, கடைசி வியாழக்கிழமைக்கு பதிலாக கடைசி திங்கள் கிழமைக்கு மாற்றப்படுவதாக தெரிவித்து இருந்தது.

மேலும், இந்த மாற்றமானது, ஏப்., 4 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில், எந்தவொரு ஒப்பந்தங்கள் காலாவதியாகும் நாள் மாற்றம் குறித்து அறிவிப்புக்கு முன்னர், தங்கள் ஒப்புதலை பெற வேண்டுமென, பங்குச் சந்தைகளுக்கு சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அறிவுறுத்தி உள்ளது.

செபியின் ஆலோசனையை ஏற்று, காலாவதியாகும் நாளை மாற்றும் முடிவை, காலவரையின்றி ஒத்திவைப்பதாக என்.எஸ்.இ., அறிவித்து உள்ளது.

என்.எஸ்.இ., காலாவதி நாள் மாற்றம் ஒத்திவைக்கப்பட்டதன் எதிரொலியாக, நேற்றைய வர்த்தகத்தின் போது, பி.எஸ்.இ., பங்குகள் 15 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டது. தற்போது பி.எஸ்.இ., காலாவதி நாள் செவ்வாய்க் கிழமையாக இருந்து வருகிறது.

Advertisement