10ம் வகுப்பு தமிழ் தேர்வு மிகவும் எளிமை காஞ்சி மாணவ, மாணவியர் உற்சாகம்

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கியது. ஏப்ரல் 15 ம் தேதி வரை நடைபெறும் தேர்வுக்கான மொழித்தேர்வு நடந்தது.

முதல் நாள் பொதுத்தேர்வு என்பதால், தேர்வு எவ்வாறு எழுத வேண்டும். மாணவ --- மாணவியர் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தில் உள்ள 68 தேர்வு மையங்களிலும், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். இந்த தேர்வு மையங்களுக்கு, 56 முதன்மை காப்பாளர்கள், 93 பறக்கும் படையினர், கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 183 பள்ளிகளைச் சேர்ந்த, 7,502 மாணவர்களும், 7,836 மாணவியர், 232 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 315 தனித்தேர்வர்கள் என, 15,885 மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர்.

இதில் 164 மாணவர்கள் நேற்று மொழித்தேர்வில் 'ஆப்சன்ட்' ஆகினர்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, பி.எம்.எஸ்.,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மாணவியர் அறைக்கு சென்று பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 68 தேர்வு மையங்களில், அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், 'பள்ளித் தேர்வர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் யாரும் தங்களுடன் மொபைல்போனை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது. 'ஆள் மாறாட்டம், வினாத்தாள், விடைத்தாள் மாற்றம் போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால், தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

------------------

தமிழ் ஆசிரியையின் வழிக்காட்டுதலின் படி, முக்கிய வினாக்களை தேர்வு செய்து படித்தேன். ‛விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்', ‛கற்கை நன்றே கற்கை நன்றே‛, ‛பண்முகக் கலைஞர்' உள்ளிட்ட வினாக்கள் இடம் பெற்றிருந்தன. தேர்வு மிகவும் சுலபமாக இருந்தது. 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவேன்.

- பா. காவியா

மாத்துார், ஸ்ரீபெரும்புதுார்.

------------

இரண்டு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிகவும் சுலபமாக இருந்தன. செயற்கை நுண்ணறிவு குறித்த வினா கடிணமாக இருந்தது. புகைப்படத்தை வைத்து, ‛காட்சியை கண்டு கவினுற எழுதுக' என்ற வினா கற்பனை திறனை வளர்க்கும் விதமாக இருந்தது.

-பி.டேவிட் சேவியர்

ஸ்ரீபெரும்புதுார்

--------------

தமிழ் பாடத்தில் கேட்கப்பட்டு இருந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்தன. மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்துள்ளேன். தமிழ் பாடத்தில், 80 மதிப்பெண்கள் பெறுவேன்.

- ஜி.பாரதி

10ம் வகுப்பு மாணவி,

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்.

------------

-------------முதல் முறையாக அரசு பொதுதேர்வு எழுத உள்ளோம் என்பதால் சற்று பயமாக இருந்தது. எனது பெற்றோர் கொடுத்த தைரியத்தால், பயமின்றி தேர்வு எழுதினேன். எனக்கு நன்கு தெரிந்த நெடு வினாவிற்கு விரிவாக விடையளித்தேன். தொடர்ந்து மூன்று மதிப்பெண் வினாக்களுக்கும், அடுத்து, இரு மதிப்பெண், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளித்தேன். தமிழ் பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன்.

பி.ஜெயச்சந்திரன்,

10ம் வகுப்பு மாணவர்,

பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

-------------------------------

---எங்கள் பள்ளியில் நடந்த திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களே அதிகம் கேட்கப்பட்டு இருந்தன. அனைத்தும் நன்கு படித்த தெரிந்த வினாக்களே கேட்கப்பட்டு இருந்துன. இதனால், எந்தவித தயக்கமும் இன்றி எழுதியுள்ளேன். தமிழ்பாடத்தில், 85 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன்.

பி.சபரிநாதன்

10ம் வகுப்பு மாணவர்,அந்திரசன் மேல்நிலைப்பள்ளி,

காஞ்சிபுரம்.

Advertisement