லண்டன் கல்லுாரியில் மம்தாவை 'மடக்கிய' மார்க்சிஸ்ட் மாணவர்கள்

லண்டன் : ''எதிர்ப்புகளை பார்த்து அஞ்ச மாட்டேன். வங்கப் புலி போல நடந்து செல்வேன். முடிந்தால் என்னை பிடிக்க பாருங்கள்,'' என எதிர்ப்பாளர்களுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.


ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் அழைப்பை ஏற்று, அங்கு சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 70, அங்குள்ள கெல்லாக் கல்லுாரியில், 'வங்கதேச பெண்களுக்கு அதிகாரம் வழங்கல் மற்றும் அதன் வெற்றி' என்ற தலைப்பில் பேசினார்.


அவர் பேசத் துவங்கியதும், அந்த அறையில் கூடியிருந்த மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பினர் சிலர் எழுந்து, பதாகைகளை காட்டி, மம்தா பானர்ஜிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.


கொல்கட்டா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்தனர். திரிணமுல் காங்., பிரமுகர் ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும் அவர்கள் கண்டித்தனர்.

இதற்கு பதிலளித்து மம்தா பேசியதாவது:



உங்களின் எதிர்ப்பு, எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. பேசுங்கள், நன்றாக, சத்தமாக பேசுங்கள். அப்போது தான், உங்கள் அக்காவான நான், வங்கப் பெண் புலி போல நடந்து செல்வேன்; முடிந்தால் என்னை பிடித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எழுப்பும் மருத்துவமனை விவகாரம், மத்திய அரசின் முடிவு. அதில், மாநில அரசின் பங்கு எதுவுமில்லை. மேலும், அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

அது குறித்து எதுவும் கூற மாட்டேன்.

இவ்வாறு மம்தா ஆவேசமாக பேசினார்.

Advertisement