'அக்ரி ஸ்டேக்' பதிவு எங்கிருந்தும் செய்யலாம்


மத்திய, மாநில அரசுகள் சார்பில், விவசாயிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி, ஆதார் போல் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படும்.


இம்மாத இறுதிக்குள் இந்த விபரங்கள் சேகரிக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இதை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


விவசாயிகள் எங்கு இருந்தாலும், அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு ஆதார் எண், அதில் தரப்பட்ட மொபைல் போன் எண், சர்வே நம்பரை சரிபார்ப்பதற்காக சிட்டா போன்றவற்றை எடுத்துச் சென்றால் போதும். விபரம் சேகரிக்கப்பட்டு தனி குறியீட்டு எண் வழங்கப்படும். கூட்டுப்பட்டா கொண்டவர்களுக்கும் இந்த பதிவுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


நிலம் தன் பெயரில் உள்ள ஒவ்வொருவருமே இந்த தனிக்குறியீட்டு எண் வைத்துக் கொண்டால் மட்டுமே, எதிர்வரும் காலங்களில் விவசாயம் தொடர்பான எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியும். இந்த பதிவுகளை மேற்கொள்ளாவிட்டால், பி.எம்., கிசான் பயனாளிகளாய் இருந்தால், அதற்கான தொகை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



- நமது நிருபர் -

Advertisement