அமெரிக்க வரி விதிப்பு குறித்து பார்லி.,யில் விவாதிக்காதது ஏன்? கேள்வி எழுப்புகிறார் சிதம்பரம்

புதுடில்லி : ''இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்தது தொடர்பாக, பார்லிமென்டிலோ, எதிர்க்கட்சிகளிடமோ மத்திய அரசு விவாதிக்காதது ஏன்?'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காங்., ராஜ்யசபா எம்.பி., சிதம்பரம் கூறியதாவது:

நம் நாட்டு ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி விதித்து இருப்பது குறித்து, மத்திய அரசு எந்த விவாதமும் நடத்தவில்லை.

ஆலோசனை



அவர்கள் ஒரு அடி முன்னேறினாலோ, இரண்டு அடி பின் நகர்ந்தாலோ, நாம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்ற நம் நிலைப்பாட்டை இந்த அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

குறைந்தபட்சமாக, பார்லிமென்டில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை பெற வேண்டும். ஆனால், இந்த அரசு எதையும் செய்யவில்லை.

நாங்கள் இருட்டில் வைக்கப்பட்டுள்ளோம். பெரும்பாலான மத்திய அமைச்சர்களும் அதே நிலையில் தான் உள்ளனர்.

இதுபோன்ற நேரங்களில் நம் எதிர்வினை கொள்கைகளை வகுப்பது யார்? சத்தியமாக எனக்கு தெரியவில்லை. வேறு யாருக்கும் தெரியாது என நினைக்கிறேன்.

அமெரிக்கா விதிக்கும் ஒருதலை பட்சமான வரியை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்வேறு நாடுகளும் பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. மத்திய அரசும் நம் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். டிரம்பின் வரி விதிப்புக்கு பணியக் கூடாது.

அணுகுமுறை



சர்வதேச சந்தையில், விவசாயம், ஜவுளி மற்றும் தொழில்துறை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் நாம் ஒன்றிணைந்து பொதுவான அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.

ஒருவேளை மற்ற நாடுகளை விட்டுவிட்டு, இந்தியாவை மட்டும் டிரம்ப் தேர்ந்தெடுத்து வரி விதித்தால், 3 முதல் 6 மாதங்களில் நம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement