பண்ருட்டியில் வரி வசூலில் அடாவடி கூடாது

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி இயல்பு கூட்டம் நேற்று நடந்தது.

சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கமிஷனர் கண்ணன், துணை சேர்மன் சிவா, உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஆனந்தி (தி.மு.க.,) : முதல்வர் ஸ்டாலின் பஸ் நிலையம், மார்க்கெட் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பணிகள் துவங்கவில்லை.

கலைவாணி (தி.மு.க.,): கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

கிருஷ்ணராஜ் (வி.சி.,): எனது வார்டில் சாலை வசதி, தெருமின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

சண்முகவள்ளி (தி.மு.க.,) : சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தியவர்களுக்கு பெயர் மாற்றம் செய்திட சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

சோழன் (தி.மு.க.,) : சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி ஆட்டோ ஸ்டேண்ட் செயல்படுகிறது. போக்குவரத்து போலீசார் செயல்படுவதுபோல் தெரியவில்லை.

ராமலிங்கம் (தி.மு.க.,) : பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை கட்டுபடுத்த வேண்டும்.

சேர்மன் ராஜேந்திரன் பேசுகையில், 'பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும். தொழில் வரி குறைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். சொத்து வரி, குடிநீர் வரி வசூலிக்கும் போது கனிவாக பேசி வரியை பெற வேண்டும். அடாவடியில் ஈடுபடக்கூடாது' என்றார்.

Advertisement