ஆவணங்களை பகிர்ந்தால் ஆபத்து வரும்; பல கோடி ரூபாய் வரி பாக்கி நோட்டீஸ் வந்ததால் அப்பாவிகள் அதிர்ச்சி!

10

புதுடில்லி: தினமும் முட்டை மற்றும் ஜூஸ் விற்பனை செய்பவர்களுக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி உள்ளது. அதனை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ம.பி.,யின் தாமோ மாவட்டம் பதராரியா நகரைச் சேர்ந்தவர் பிரின்ஸ் சுமன். முட்டை வியாபாரி.


நோட்டீஸ்






இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசில் , ' கடந்த 2022ம் ஆண்டு ' பிரின்ஸ் எண்டர் பிரைசஸ்' என்ற நிறுவனம் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி . தோல், இரும்பு மற்றும் மரம் தொடர்பான தொழிலில் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசுக்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி பாக்கி செலுத்த வேண்டி உள்ளது அதனை செலுத்த வேண்டும்', எனக் கூறப்பட்டு இருந்தது.

வறுமை



ஆனால், பிரின்ஸ் சுமன் கூறியதாவது: நான் தள்ளுவண்டியில் சென்று முட்டை விற்று வருகிறேன். நான் டில்லி சென்றது கிடையாது. அங்கு எந்த தொழிலையும் துவக்கியது இல்லை. தனக்கும் இந்த தொழிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனது சம்பளத்தை மட்டும் நம்பியே தனது குடும்பம் உள்ளது எனக்கூறியுள்ளார்.


சிறு மளிகைக் கடை நடத்தும் இவரது தந்தை கூறுகையில், எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், தினசரி செலவுக்கு கூட நாங்கள் ஏன் கஷ்டப்படவேண்டி உள்ளது என்றார்.

புகார்



இவரது குடும்ப வழக்கறிஞர் கூறுகையில், பிரின்ஸ் சுமனின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளோம் என்றார்.

ஜூஸ் வியாபாரி



இதே போன்று உ.பி., யின் அலிகாரில் ஜூஸ் விற்பனை செய்துவரும் ரஹீஸ் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ரூ.7.5 கோடி மேல் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2020- 21 ல் அவரது பெயரில் கோடிக்கணக்கான போலி பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், இதனால், ரூ.7,79,02,457 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக ரஹீஸ் கூறுகையில் , ' நான் ஜூஸ் மட்டும் விற்கிறேன்.இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. அரசு எனக்கு உதவுமாறு கேட்கிறேன். நான் ஒரு ஏழை. பொய் வழக்கில் சிக்க வைக்கக்கூடாது. நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை அணுகினோம். அவர்கள் எனது தனிப்பட்ட ஆவணங்களை வேறு யாரிடமாவது பகிர்ந்து கொண்டீர்களா என கேட்டார்கள். நான் அவற்றை யாருடனும் பகிரவில்லை என பதிலளித்தேன் என்றார்.


இவரது ஆவணங்களை பயன்படுத்தி சிலர், கடந்த 2022ம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது நன்கொடை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.


ரஹீஸ் நண்பர் கூறுகையில், ' ரஹீஸ் கோடீஸ்வரர் ஆக இருந்தால் அவர் ஏன் ஜூஸ் கடை நடத்த வேண்டும். இந்த விவகாரம் நிச்சயம் மோசடி தான் என்கிறார்.

Advertisement