பிரேசிலிடம் வீழ்ந்தது இந்தியா: கண்காட்சி கால்பந்து போட்டியில்

சென்னை: கண்காட்சி கால்பந்து போட்டியில் இந்திய அணி 1-2 என பிரேசில் அணியிடம் தோல்வியடைந்தது.

சென்னையில், கண்காட்சி கால்பந்து போட்டி நடந்தது. இதில் ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ் அணி, விஜயன் வழிநடத்திய 'இந்தியா ஆல் ஸ்டார்ஸ்' அணிகள் மோதின.

பிரேசில் சார்பில் கடந்த 2002ல் 'பிபா' உலக கோப்பை வென்ற பிரேசில் அணியில் இடம் பெற்றிருந்த ரொனால்டினோ, ரிவால்டோ, கில்பர்டோ சில்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய அணியில் முன்னாள் வீரர்களான விஜயன், சண்முகம் வெங்கடேஷ், கரண்ஜித் சிங், சுபாஷிஷ் ராய் சவுத்ரி, அர்னாப் மாண்டல், நல்லப்பன் மோகன்ராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

மொத்தம் 70 நிமிடம் போட்டி நடந்தது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 43வது நிமிடத்தில் பிரேசிலின் வயோலா ஒரு கோல் அடித்தார். இதற்கு, அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் பிபியானோ பெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின், 64வது நிமிடத்தில் பிரேசிலின் ரிக்கார்டோ ஒலிவேரா ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தார். தொடர்ந்து போராடிய இந்திய வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement