மகிழ்ச்சியை நோக்கி மாரத்தான் ஓட்டம்
சென்னை:''தமிழகத்தில், மகிழ்ச்சி குறியீட்டை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள், நாட்டிற்கே முன்னுதாரணமாக அமையும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, பெசன்ட் நகரில், 'மகிழ்ச்சியை நோக்கி' என்ற கருப்பொருளில், மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த பின் அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி தரவரிசையில், 147 நாடுகளில் இந்தியா, 118வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த தரவரிசை குறித்து விவாதங்கள் நடக்கும் நிலையில், தமிழகத்தில் மகிழ்ச்சி குறியீட்டை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தீட்டும் திட்டங்கள், நாட்டிற்கே முன்னுதாரனமாக அமையும்.
நடை பயிற்சி, ஓட்ட பயிற்சி போன்றவை, உடலில் பல்வேறு ஹார்மோன் சுரக்க வழிவகை செய்கிறது. இந்த ஹார்மோன் வலியை போக்குவது, மனநலம் காப்பது, மகிழ்ச்சியை கொடுப்பது போன்ற பணிகளை செய்கின்றன.
மக்களிடையே உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியை ஊக்கப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இதில், மாவட்டந்தோறும், 8 கி.மீ., நடைபாதை திட்டம் முக்கியம்.
இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.