வனப்பகுதியில் இரவு நேர 'டிரக்கிங்' சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

வால்பாறை,: வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறை மலைப்பகுதியில், இரவு நேரத்தில் சுற்றுலா பயணியர் வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு வசதியாக, வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறு நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், சில தங்கும் விடுதிகளின் பணியாளர்கள், வனவிலங்குகளை காணலாம் என, சுற்றுலா பயணியரை இரவு நேரத்தில் வாகனத்தில் அழைத்துச்செல்கின்றனர்.இதனால், வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணியர் இரவு நேரத்தில் வெளியே சென்றாலும், அவர்களை அழைத்து செல்வோர் மீதும், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்

Advertisement