அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டு
சென்னை, ஏப். 2-
விளையாடும்போது தவறி விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்ட மகனுக்கு, உயர் தர சிகிச்சை வழங்கி குணப்படுத்திய, அரசு மருத்துவமனையை, ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனராக இருப்பவர் ஹரிகிரண். இவரது, 8 வயது மகன் நிஷ்விக். கடந்த மாதம், 13ம் தேதி கால்பந்து விளையாடி கொண்டிருந்தபோது, கீழே விழுந்ததில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், பொது வார்டில் சிறுவனை அனுமதித்தனர். சிறுவனுக்கு, உயர் சிகிச்சைகளும், தொடர் மருத்துவ கண்காணிப்பும் வழங்கப்பட்டது. அதன் பயனாக குணமடைந்து, 15ம் தேதி நிஷ்விக் வீடு திரும்பினான்.
இந்நிலையில், போலீஸ் துணை கமிஷனர் ஹரிகிரண் வெளியிட்ட அறிக்கை:
டாக்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை பாராட்டுகிறேன். மருத்துவமனையின் இயக்குநர் லட்சுமி தலைமையிலான டாக்டர்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
எக்ஸ்ரே பரிசோதனை முதல் செவிலியர் கண்காணிப்பு வரை அனைத்திலும், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.