ஒன்பது விருதுகள் பெற்ற 'இன்ஷா அல்லாஹ்' படம்

கோவை; ரம்ஜானை முன்னிட்டு, ஒன்பது சர்வதேச விருதுகளை பெற்ற, 'இன்ஷா அல்லாஹ்' திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது.

கோவை திரைப்பட இயக்கம் மூலம், சிறந்த உலக திரைப்படங்களை, மாதம் தோறும் இலவசமாக திரையிட்டு வந்தவர் இயக்குனர் பாஸ்கரன்.

இவர் கோவை கரும்புக்கடை, பிள்ளையார் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, 'இன்ஷா அல்லாஹ்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இதில், கவிஞர் விக்கிரமாதித்யன், அவரது மனைவி பகவதி அம்மாள் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, ஒன்பது சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது. 30 பன்னாட்டு திரைப்பட விழாவின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை கர்னாடிக் தியேட்டரில், இன்று இரவுக்காட்சியாக திரையிடப்படுகிறது.

இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது:

கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதை, எழுத்தாளர் பிர்தவுஸ் ராஜகுமார் எழுதிய சிறுகதை இரண்டையும் ஒன்றிணைத்து, திரைக்கதை அமைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறேன்.கோவை சாகுல் ஹமீது தயாரித்து இருக்கிறார்.

கோவையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். எளிமையாக வாழும் இஸ்லாம் மக்களின் வாழ்வியலையும், மத நல்லிணக்கத்தையும் கருப்பொருளாகக் கொண்டு, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement