சம்பிரதாய நிகழ்வாகிறதா விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், விவசாயிகளுக்கு பயனின்றி சம்பிரதாயமாக மாறி வருவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், விவசாய வளர்ச்சி குறித்த விவாதம் நடப்பதில்லை. தேவையான விதை, உரம் குறித்தும் பேசப்படவில்லை. விவசாய வளர்ச்சிப் பணிகளுக்கு போதிய ஆலோசனையும் தருவதில்லை. கோரிக்கைக்கு, தவறான பதிலை அனுப்புகின்றனர்.

புதிய ரக விதைகள் வழங்குவதில்லை. முக்கிய துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை.

விவசாயிகள், பருவத்திற்கு என்ன பயிரிடுவது, கரும்பு போன்ற பயிர்களை எப்படி திறனாக உற்பத்தி செய்வது, நெல், வேர்க்கடலை, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் பயிரிடுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவைகளைப் பற்றி ஆலோசித்து அறிவுரை வழங்காமல் சம்பிரதாய கூட்டமாக நடக்கிறது.

சங்கங்களின் பிரதிநிதிகள் என, சில விவசாய பிரதிநிதிகள் மட்டும் அடிக்கடி பேசி நேரத்தை வீணடிக்கின்றனர். புதிய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உண்மையாக விவசாயம் செய்யும், முன்னோடி விவசாயிகளின் கருத்துகளை பேச வாய்ப்பளிக்க வேண்டும். சர்க்கரை ஆலை எல்லை பிரச்னை போன்ற, நீண்டகால பிரச்னைக்கும் தீர்வு காணப்படுவதுமில்லை.

பட்டா மாற்றம் குறித்து பேசுவதை நிறுத்தி, மாதாந்திரம் முதல் வெள்ளிக்கிழமை நடக்கும் பட்டா மாற்றத்திற்கான தனி குறைகேட்புக் கூட்டத்தில் பேசலாம். விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தென்னை, பனை, வாழை வளர்ப்பு போன்ற செயல்களை விளக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், வேளாண் சம்பந்தமாக, அதன் வளர்ச்சி திட்டம் சார்ந்த கூட்டமாக நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement