அ.தி.மு.க., நன்றாக இருக்க முதல்வர் விருப்பம்: முத்துசாமி

ஈரோடு : ஈரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:


மத்திய கல்வித் துறை அமைச்சர் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், நிதியை விடுவிப்பதாக கூறுவதால், தி.மு.க., போராட்டங்களை தொடர்கிறது. மடைமாற்றம் செய்ய போராட்டம் நடத்துவதாக கூறுவது தவறு.


தொகுதி மறுவரையறையில் தொகுதிகள் அதிகமானால், தமிழகத்தின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் கூடுதல் எண்ணிக்கையில் பிரதிநிதிகள் போராடுவர்; அப்படிபட்ட நல்ல எண்ணத்தோடு தான் இந்த விஷயத்தில் தி.மு.க., போராடுகிறது. தி.மு.க.,வை பொறுத்தவரை, யாருடன் கூட்டணி என்றாலும், அது நேரடியாகத்தான் இருக்கும்; திரைமறைவில் கூட்டணி வைக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


'சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், டில்லி சென்று பழனிசாமி - செங்கோட்டையன் போன்றோர் உள்துறை அமைச்சர் உட்பட பா.ஜ., தலைவர்கள் பலரை சந்தித்துள்ளனர். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்' என நிருபர் கேட்டதும், ''நான் எது போலவும் பார்க்கவில்லை. அவர்கள் இரண்டு பேரிடமும் கேட்டுவிட்டு சொல்கிறேன்.


அந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் அடிப்படை எண்ணம். சட்டசபையில் எதிர்க்கட்சி குறித்து முதல்வர் பேசினார். பின், அதில் உங்களுக்கு வருத்தம் என்றால், அதை நான் திரும்பப் பெறுகிறேன் என்று சொன்னார். இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். முதல்வரும், அந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார் என்பதை,'' என்றார்.

Advertisement