கிசான் உதவித்தொகை பெற தனி அடையாள எண் கட்டாயம் விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

விழுப்புரம், மார்ச்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கிசான் உதவித் தொகை பெற தனி அடையாள எண் கட்டாயம் என்பதால், உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மை இணை இயக்குநர் ஈஸ்வர் செய்திக்குறிப்பு:

தமிழக விவசாயிகள், அரசின் பல்வேறு திட்டப் பலன்களை பெற, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.

இதில், ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசு திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக, அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட, வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர், அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தி, விவசாயி களுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

மாவட்டத்தில் பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,958 விவசாயிகளில் 50,404 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.

மீதமுள்ள 39,554 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண் விவரங்களுடன், வேளாண்துறை அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொண்டு, உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, செயலியில் பதி வேற்றம் செய்து, தனி அடையாள எண் வழங்கப்படும். விவசாயிகள், தொடர்ந்து பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற, விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி, தனி அடையாள எண் கட்டாயம் பெற வேண்டும்.

வரும் ஏப். 8ம் தேதிக்குள், பி.எம்.கிசான் தொகை பெறும் விவசாயிகள், தொடர்ந்து பணம் பெற தனி அடையாள எண் பெற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement