நான் முதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான் முதல்வன் பள்ளி முடிவு திட்டத்தின்கீழ் 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

நான் முதல்வன் பள்ளி முடிவு திட்டம் 18 முதல் 35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உருவாக்கும் திட்டமாகும். குறுகிய கால பயிற்சி வழங்கி தொழில் சந்தையில் தகுதிப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு தங்களது தொழில் முறை திறன்களுக்கேற்ப பணியாளர்களாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தரம் வாய்ந்த கட்டணமில்லா பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதிலுள்ள பல்வேறு பயிற்சிகளில் சேர விரும்புவோர் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையத்தளத்தில் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு நேரில் வந்தும் தேவையான ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பள்ளியில் இடைநின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம் 100 மணி நேரத்திற்கு மேல். பயிற்சியின் காலத்திற்கேற்ப உதவித்தொகை வழங்கப்படும். கட்டுமானம், மூலதன பொருட்கள் கையாளுதல், எலக்ட்ரானிக் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகள், வாகன தொழில்நுட்பம், சுகாதாரம், குழாய் வேலை உள்ளிட்ட தொழில்துறைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும் 04146-294989 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement