இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம் சலுகை வழங்க ஸ்பைசஸ் வாரியம் முடிவு

கம்பம்: இயற்கை வேளாண் முறையில் ஏலக்காய் சாகுபடியை ஊக்குவிக்க ஸ்பைசஸ் வாரியம் மீண்டும் முயற்சிகளை துவக்க உள்ளது. இதற்கென விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. நோய்களை கட்டுப்படுத்தவும், அதிக மகசூல் பெற சாகுபடியில் ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்தினர்.

ஏற்றுமதியாகும் வெளிநாடுகளில் ஆய்வக பரிசோதனை செய்து, ஏலக்காயை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையை தவிர்த்து, ஏற்றுமதியை அதிகரிக்க ஸ்பைசஸ் வாரியம் 3 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்து , ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில், இயற்கை முறையில் சாகுபடி செய்த ஏலக்காய்களுக்கு சிறப்பு ஏலம் நடத்தியது.

இந்த சிறப்பு ஏலத்தில் நான்கு ஏல நிறுவனங்கள் மட்டும் பங்கேற்றன. முதல் ஏலத்தில் எஸ்.ஐ.சி.சி. நிறுவனம் 2297 கிலோவும், அடுத்து மாஸ் நிறுவனம் 15 ஆயிரம் கிலோவிற்பனைக்கு வைத்தது. சராசரி விலையாக கிலோவிற்கு ரூ.1125 க்கு ஏலம் போனது. இந்த ஏலக்காய் அனைத்தும் ஸ்பைசஸ் வாரியத்தின் ஆய்வகத்தில் பரிசோதித்து இயற்கை முறையில் சாகுபடி மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவு பூச்சி கொல்லி பயன்படுத்தியது என்று சான்றளிக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் வியாபாரிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.

இயற்கை முறையில் மகசூல் குறைவாகவும், எதிர்பார்த்த விலையும் கிடைக்கவில்லை. இதனால் இயற்கை முறை சாகுபடியை கைவிட்டனர். வேறு வழியின்றி இயற்கை முறையில் சாகுபடி செய்த ஏலக்காய்க்கு நடத்தி வந்த சிறப்பு ஏலத்தையும் வாரியம் ரத்து செய்தது.

இந்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி மீண்டும் இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடியை ஊக்குவிக்க வாரியம் முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட 10 சதவீதம் பரப்பிலாவது இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி இருக்க வேண்டும் என்று வர்த்தக அமைச்சகம் கூறி உள்ளது. அதன் பேரில் ஸ்பைசஸ் வாரியம் சில சலுகைகளை வழங்கி முன்னெடுப்பு நடவடிக்கைகளை துவங்க உள்ளது.

Advertisement