தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க., பொதுக்கூட்டம்

1

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நெருக்கடியான தேசிய நெடுஞ்சாலையில் கட்சி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

இப்பேரூராட்சியில் திண்டுக்கல்-காரைக்குடி சாலை தேசிய நெடுஞ்சாலை மாற்றப்பட்ட பின்னர் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இச்சாலையில் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்போது நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் நிலை இருந்தது.

இதனால் இச்சாலைக்கு பதிலாக நெரிசல் இல்லாதமேலுார் ரோட்டில் சீரணி அரங்க வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தேர்தலின் போது மாவட்ட நிர்வாகமும் இத்திடலையே பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடமாக அறிவித்து வருகிறது. ஆனால் இதை எந்த கட்சியினரும் மதிப்பதாக தெரியவில்லை. போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.

நேற்று முன்தினம் இச்சாலையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக்கூட்டத்திற்கு பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானோர் சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்து இடையூறாக சேர் போடப்பட்டு கூட்டம் நடந்தது. இதனால் வாகனங்கள் பல மணி நேரம் நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்றன.

போலீசார் சில வாகனங்களை ஜி.ஹெச்., ரோட்டில் திருப்பி விட்டனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர். இதை காரணம் காட்டி பிற கட்சியினரும் அங்கு கூட்டம் நடத்த முயன்று வருகின்றனர்.

எனவே இனி வரும் காலங்களில் அனைத்து பொதுக்கூட்டங்களையும் சீரணி அரங்கத்திடலில் மட்டுமே நடத்த அனுமதிக்க வேண்டும்.

Advertisement