மது குடிக்க வந்த ரவுடி ஆயுதங்களால் தாக்கி கொலை

ஹெப்பகோடி: நண்பர்கள் அழைப்பின் பேரில், மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரவுடி மஞ்சுவை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

துமகூரு மாவட்டம், குனிகல்லில் வசித்து வந்தவர் மஞ்சு என்ற நேபாளி மஞ்சா, 38. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, குண்டர் தடுப்பு சட்டம் உட்பட பல வழக்குகள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் வசித்து வந்தார். யுகாதியையொட்டி, மது விருந்து ஏற்பாடு செய்துள்ளதாக கூறி, மஞ்சாவை நண்பர்கள் அழைத்தனர்.

அவரும், நேற்று முன்தினம் இரவு ஹெப்பகோடி - கொல்லஹள்ளி பிரதான சாலையில் உள்ள காலி இடத்தில், நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு, கத்தி, அரிவாளால் வந்த நான்கைந்து பேர், மஞ்சாவை சரமாரியாக தாக்கிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

ஹெப்பகோடி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாவட்ட எஸ்.பி., பாபா கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட மஞ்சு மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலின்போதும், மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். எனவே, தன் இருப்பிடத்தை, குனிகலுக்கு மாற்றிக் கொண்டார்.

யுகாதியையொட்டி, மது விருந்துக்கு, அவர் வந்தபோது, மர்ம நபர்கள் அவரை தாக்கிக் கொலை செய்துள்ளனர். அவர் வந்த தகவல் தெரிந்தே, யாரோ அவரை கொலை செய்திருக்கலாம். சம்பவ இடத்தில் இரண்டு பைக்குகள் மீட்கப்பட்டு உள்ளன. விருந்துக்கு அழைத்த நண்பர்களிடம் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement