சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு

2

சென்னை: சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


நேபாளத்தை சேர்ந்தவர் ஷர்மிளா தாப்பா, இவர் ஆரம்ப காலங்களில் சின்னத்திரையில் தோன்றி, காமெடி செய்து பிரபலமானார். அதை தொடர்ந்து, திரைப்படத்துறைக்கு வந்தார். தொடர்ந்து, விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் ஆகிய சினிமா திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில் ஷர்மிளா தாப்பா, பாஸ்போர்ட் காலாவதி ஆன நிலையில் மீண்டும் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில், அண்ணா நகர் முகவரியை ஆவணமாக கொடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பாஸ்போர்ட் பெறுவதில் முறைகேடு இருப்பதாக நடிகை தாப்பா மீது உள் துறை அமைச்சகம் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், நேபாளத்தை சேர்ந்தவர் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றது எப்படி என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த புகாரில் அடிப்படையில் நடிகை தாப்பா மீது மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement