இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு

4


புதுடில்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.


பாதுகாப்புத்துறையில் வெளிநாடுகளை நம்பி இருந்த இந்தியா, அதனை மாற்றி தன்னிறைவு பெற செய்வது என இலக்கு நிர்ணயித்ததுடன், உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்தது. இதன்படி ஏராளமான ஆயுதங்கள், தளவாடங்கள், அணு ஆயுதங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.


இந்த நிதியாண்டில், வெடிமருந்துகள், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் சார்ந்த துணை அமைப்புகள் உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.


ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் அதனை ஆய்வு செய்வதற்கு ஏன பாதுகாப்பு உற்பத்தித்துறை தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அதில் கடந்த 2024- 25ம் நிதியாண்டில், 1,762 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 16.92 சதவீதம் அதிகம் ஆகும்.


இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2024- 25ம் நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 2023 - 24ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.21,083 கோடியைக் காட்டிலும் 12 சதவீதம்(ரூ.2,539) கூடுதல் ஆகும்.
இந்த சாதனையை நிகழ்த்திய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

2029ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு ரூ.50 ஆயிரம் கோடி இலக்கு என்பதை நோக்கி பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது.

பாராட்டு



இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் உலகளாவிய தலைமைப்பண்பை நோக்கிய பயணத்தில் இது பெருமைமிக்க தருணம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

Advertisement