ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் முறைகேடு விசாரணை நடத்த அ.தி.மு.க., கோரிக்கை

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

புதுச்சேரி அரவிந்தர் வீதி முதல் திப்ராயப்பேட்டை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் கழிவு நீர் வாய்க்கால் பணியை பார்வையிட்ட அவர் கூறியதாவது;

புதுச்சேரியில், மத்திய அரசின் 50 சதவீத நிதி பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கடந்த ஆட்சியில் முடக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் ரூ.670 கோடி அளவில் 89 திட்டங்களை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு அனுமதி அளித்தும், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அரவிந்தர் வீதி முதல் திப்புராயப்பேட்டைவரை கழிவுநீர் வாய்க்காலை மேம்படுத்த, நல்ல நிலையில் உள்ள 11 சிறு பாலங்களை இடித்துவிட்டு, புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணிக்கு ரூ.100 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

குமரகுரு பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா திடல், புதிய பஸ் நிலையம், ரூ.112 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம், பள்ளவாய்க்கால், மேட்டு வாய்க்கால்கள் புணரமைப்பு பணிகளில் முடிவுற்ற வேலைகள், அதற்கான செலவு விபரம் குறித்து விரிவான விசாரணைக்கு கவர்னர் மற்றும் முதல்வர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement