டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிப்பு செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், உலக கோடீஸ்வரர்கள் பல பேர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர்.
அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்தார். கூறியபடி உலகின் 180 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து அமல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தைகளில் நேற்று சரிவு ஏற்பட்டது. இதனுடன் உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமான தகவல்.
அவர்களில் முதலாவது இடத்தில் இருப்பவர், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க். இவர் இழந்த தொகை ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்.
இதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் உள்ளார். இவருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 993 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்கிற்கு 94 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவர்களை தவிர்த்து, அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் டெல், லாரி எல்லிசன், ஜென்சன் ஹூவாங், லாரி பேஜ், செர்ஜி பிரின், தாமஸ் பீட்டர்பி ஆகியோருக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவை தாண்டி , பிரான்சின் பெர்னாட் அர்னால்ட்டின் சொத்துகளும் சரிவை சந்தித்து உள்ளது.


