தாழ்வாக செல்லும் மின் வழி தடம் ஈஞ்சம்பாக்கத்தில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டடம் அருகே, ஈஞ்சம்பாக்கம் கான்கிரீட் சாலையில் இருந்து, தாமரைப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை செல்கிறது.

இந்த கான்கிரீட் சாலை வழியாக, சிறுவாக்கம் மோட்டூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், தாமரைப்பாக்கம், வெள்ளைகேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

சிறுவாக்கம் மோட்டூர் - ஈஞ்சம்பாக்கம் சாலையில் இருந்து, தாமரைப்பாக்கம் செல்லும் சாலை இறங்கும் போது, ஆதிதிராவிட துவக்கப் பள்ளி அருகே, தாழ்வாக மின் வழித்தடம் செல்கிறது.

இந்த தாழ்வாக செல்லும் மின்வழித் தடத்தால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கைக்கு எட்டும் தொலைவில் மின்வழித் தடம் ஆபத்தாக தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால், டிராக்டர், சிறிய ரக லோடு வாகனங்களின் பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதை தவிர்க்க, ஈஞ்சம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி அருகே, தாழ்வாக செல்லும் மின்வழித் தடத்தை சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, மின்வழித் தடத்தை இழுத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படின் கூடுதல் மின் கம்பம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement