சர்வீஸ் சாலையில் விழுந்துள்ள இரும்பு தடுப்பால் ஒரகடத்தில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் மேம்பாலம் அருகே, மாசுக் காட்டுபாட்டு வாரிய அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது. வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவரும், ஏராளமான பயணியர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி நாள்தோறும் சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் திடீரென குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடக்கும் பாதாசாரிகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சர்வீஸ் சாலை மற்றும் மேம்பாலத்தின் மீது செல்லும் பிரதான சாலைகளுக்கு மத்தியில் உள்ள மீடியனில் இரும்பு தடுப்பு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இரவு நேரத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுபாட்டை இழந்து மோதியதில், இரும்பு தடுப்பு உடைந்து சர்வீஸ்,சாலையில் விழுந்துள்ளது.

நான்கு மாதத்திற்கு மேலாக, சாலையில் விழுந்துள்ள இரும்பு தடுப்புகளால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் விழுந்துள்ள இரும்பு தடுப்புகளால், விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையில் விழுந்துள்ள இரும்பு தடுப்பு மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமான இரும்பு தடுப்பை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement