பிரிட்டன் எம்.பி.,க்களுக்கு இஸ்ரேலில் அனுமதி மறுப்பு

லண்டன்: மேற்காசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடக்கிறது.

இருதரப்புக்கு இடையே குறிப்பிட்ட காலத்துக்கு அவ்வப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், மோதல் தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் கள நிலவரத்தை ஆய்வு செய்ய, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த எம்.பி.,க்கள் குழுவினர், சமீபத்தில் அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதில், ஆளும் தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.,க்கள் யுவான் யாங், அப்திசாம் முகமது ஆகியோர் இடம் பெற்றனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஆவணப்படம் எடுக்கவும், நாட்டுக்கு எதிராக வெறுப்பை பரப்பவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, எம்.பி.,க்கள் யுவான் யாங், அப்திசாம் முகமது ஆகியோரை, அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். பின் அவர்களை பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பினர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, “இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்திடம் பேசியுள்ளேன்.

“பிரிட்டன் எம்.பி.,க்களை இப்படி நடத்தக்கூடாது. காசாவில் போர் நிறுத்தம் தொடர வேண்டும் என்பதில், பிரிட்டன் அரசு உறுதியாக உள்ளது,” என்றார்.

Advertisement