சிட்கோ வளாகத்தில் 7 அடி அகல வடிகால் ஆலந்துார் வெள்ள பாதிப்புக்கு விமோசனம்

கிண்டி:ஆலந்துார், எம்.கே.என்., சாலை, காந்தி சாலை பகுதியில் வடியும் மழைநீர், ரயில்வே தண்டவாளத்தை கடந்து, மடுவாங்கரை வழியாக வேளச்சேரி நோக்கி செல்கிறது.

அங்கிருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பகிங்ஹாம் கால்வாய் வழியாக முட்டுக்காடு செல்கிறது. நீண்ட துாரம் பயணிப்பதால், பல்வேறு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், ஆலந்துார் எம்.கே.என்., சாலை, காந்தி சாலையில் வடியும் மழைநீரை, ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக, கத்திப்பாரா மேம்பாலம் அருகில், அண்ணா சாலையின் குறுக்கே மூடு கால்வாய் கட்டப்பட்டது.

இந்த கால்வாய், கிண்டி சிட்கோ வளாகத்தில் உள்ள கால்வாயுடன் இணைக்கப்பட்டது.

வெள்ளத்தை பிரித்து அனுப்பும் வகையில், அடையார் மண்டலம், 168வது வார்டு, ஆலந்துார் சாலையில் உள்ள மூன்று அடி அகல வடிகாலை, 7 அடி வடிகாலாக மாற்ற, மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்கு, 5.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பழைய வடிகாலை இடித்துவிட்டு, 7 அடி அகலம், 7 அடி ஆழம் வீதம், 890 மீட்டர் நீளத்தில் வடிகால் கட்டப்படுகிறது.

இந்த வடிகால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனை அருகில், அடையாறு ஆற்றில் சேரும் வகையில் கட்டமைக்கப்படுகிறது.

இதன் வாயிலாக, ஆலந்துார் பகுதியில் வடியும் மழைநீரை, எளிதில் அடையாறு ஆற்றில் சேர்க்க முடியும். இரண்டு மாதத்தில், வடிகால் கட்டும் பணி முடியும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement