தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

மதுரை : 'தர்பூசணி பழத்தில் செயற்கை சாயம் ஏற்றப்படுவதாக தவறான தகவல் பரப்பிய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தர்பூசணி பழங்களில் ஊசி போட்டு நிற கலப்படம் செய்கின்றனர் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்த தவறான கருத்தால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.15க்கு விற்ற தர்பூசணி தற்போது கிலோ ரூ.3 ஆக குறைந்துவிட்டது.

விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஏக்கருக்கு தலா ரூ. 50ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி.

அவர் கூறியதாவது:

அரசு அலுவலர் தெரிவித்த தவறான கருத்துக்களால் பொது மக்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது நியதி. காவல்துறையால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாத நிலையில், அதன் மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு தமிழக அரசு குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.

அதுபோல அரசின் உணவுப்பாதுகாப்புத்துறையால் தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு அதிகபட்சம் 15 முதல் 20 டன் பழங்கள் கிடைத்தும் உரிய விலையின்றி ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தர்பூசணியை வாங்கி விற்ற வியாபாரிகளும் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கடனாளியாகி கஷ்டப்படும் விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஏக்கருக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Advertisement