ரூ. 16 கோடியில் வாய்க்கால் துார்வாரும் பணி; அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

சிதம்பரம் : சிதம்பரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் வாய்க்கால் துார்வாரும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் வாய்க்கால் துார்வார 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக தில்லைநாயகபுரம் வாய்க்கால் துார்வாரும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகள், சிதம்பரம் வெளிவட்ட சாலை பணிகள், கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் சுற்றுலா துறை விடுதி கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

பின், அவர் கூறுகையில், 'காவிரி டெல்டா பகுதிகளான, கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், 36 கோடி மதிப்பில், 552 வாய்க்கால்கள், 2,481 கி.மீ., துாரம் துார் வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 207 வாய்க்கால் 675 கி.மீ., மீட்டர் துாரம் 16 கோடி ரூபாய் மதிப்பில் துார் வார ஆணை வழங்கப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போதே அனைத்து வாய்க்கால்களிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக இப்பணி முன்கூட்டியே துவங்கியுள்ளது' என்றார்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற் பொறியாளர்கள் கொளஞ்சிநாதன், நகராட்சி கமிஷனர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், பேரூராட்சி சேர்மன் பழனி, மாவட்ட சுற்றுலாஅலுவலர் கண்ணன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமார்ராஜ், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், கல்பனா, லதா, தாரணி உட்பட பலர் உடனிருந்தனர்

Advertisement