தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி தெளிவைக் கூட்டி, நம்பிக்கையை ஊட்டியது

''தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, தங்களிடம் இருந்த உயர்கல்வி குறித்த சந்தேகங்களை முழுமையாகப் போக்கியது; தெளிவைக் கூட்டி, நம்பிக்கையை ஊட்டியது'' என மாணவ, மாணவியர் உவகைபொங்க கூறினர்.

ஆல்வின், வேலம்பாளையம்: பள்ளி படிப்பை முடித்த பின் எதை தேர்ந்தெடுக்கலாம் என்று குழப்பம் இருந்தது. கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், ஐயத்தை நீக்கி தெளிவுபடுத்தியுள்ளனர். நன்றாக இருந்தது. தேவையான விஷயங்கள், கல்லுாரிகள் குறித்து அமைக்கப்பட்ட ஸ்டால்கள் மூலம் சந்தேகங்கள் கேட்டறிய முடிந்தது. இந்த நிகழ்ச்சி, பொக்கிஷமாக அமைந்தது.

நிரஞ்சன், கோவில் வழி: கருத்தரங்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு துறை குறித்தும், அதை தேர்ந்தெடுத்து எப்படி படிப்பது போன்றவற்றை கிடைத்துள்ளது. தனித்துவ திறமைகளை எப்படி வளர்த்து கொள்வது குறித்து எடுத்துரைத்தனர்.

ரிதன்யா, ஊத்துக்குளி: வழிகாட்டி பயனுள்ளது. எல்லா படிப்பும், நல்ல படிப்பு தான். அதை நாம் தேர்ந்தெடுத்து படிப்பது, நமது கையில் தான் உள்ளது. அதற்கு தேவையான நிறைய தகவல்கள் கிடைத்தன. எந்தப் படிப்பாக இருந்தாலும், யு.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுகளில் அணுகி வெல்வது குறித்து பேசினர். மனதளவில் நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது.

ஹேமவர்ஷினி, பல்லடம்: படிப்புகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், நமக்காக கஷ்டப்படும் பெற்றோர் குறித்து நம்பிக்கையளிக்கும் வகையில் பேசினர். இதனால், மனதுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கி பல தகவல்கள் கிடைத்துள்ளன. நாம் தேர்ந்தெடுத்து படிக்கும் துறையின் முக்கியத்துவம், தனித்துவம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.

Advertisement