வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

'ஆதார்' ஒப்படைக்க வந்த மக்கள்

திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டு, வீரபாண்டி அருகே, பலவஞ்சிபாளையத்தில், அரசு வண்டிப்பாதை புறம்போக்கில், 49 குறவர் இனக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டுவந்து, ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கச் செய்தனர்.

அவர்கள் கூறியதாவது:

நாற்பது ஆண்டுகளாக வசித்துவருகிறோம். அம்மிக்கல், கிரைண்டர் கல் கொத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். மழையால், எங்கள் வீடுகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்துள்ளது. பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டன.உணவுப்பொருட்கள், துணிகள் சேதமாகியுள்ளன. வீட்டைவிட்டு வெளியேறி, குழந்தைகளுடன் அருகிலுள்ள ரோட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொந்த ஊரிலேயே அகதிகளாகியுள்ளதால், ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியுள்ளோம்.

அருகாமையிலேயே, மேடான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து அந்நிலத்தை மீட்டு, குறவர் குடும்பங்களுக்கு பட்டா வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement