அரசு பஸ்களில் செல்லும் பயணிகள் அதிருப்தி; காட்சிப் பொருளான முதலுதவி பெட்டி

திருவாடானை : அரசு பஸ்களில் உள்ள முதலுதவிப் பெட்டி உடைந்து காட்சிப் பொருளாக உள்ளதால் பஸ்களில் செல்லும் பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிப்போர் விபத்தில் சிக்கும் போது முதலுதவி செய்ய வேண்டியது அவசியம். மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து பஸ்களிலும், மருந்துப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி வைக்கப்பட வேண்டும். ஆனால் திருவாடானை, தொண்டி மார்க்கமாக இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் இத்தகைய முதலுதவிப் பெட்டி காட்சிப் பொருளாகவே உள்ளது. சில அரசு பஸ்களில் முதலுதவி பெட்டி உள்ளது. அதுவும் உடைந்து துணியால் கட்டி வைத்துள்ளனர்.
உள்ளே மருந்துகள் உள்ளதாக என்பது தெரியவில்லை. போக்குவரத்து அலுவலர்கள் மருந்துப் பொருட்கள் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர். இது குறித்து சில அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:
மோட்டார் வாகன சட்டப்படி, பஞ்சு, பேண்டேஜ் துணி, டிஞ்சர் என மருத்துவப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். இதனால் பயணத்தின் போது மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் முதலுதவி பெட்டி பயன் உள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான பஸ்களில் பெட்டி மட்டுமே பொருத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளே மருந்துகள் இருப்பதில்லை. மேலும் சில பஸ்களில் பெட்டிகளே இருப்பதில்லை. விபத்து ஏற்பட்டால் காயமடையும் பயணிக்கு மருந்துகள் போடாமலே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது என்றனர்.