கண்ணகி கோயிலுக்கு ரோடு அமைக்காததால் பக்தர்கள் ஏமாற்றம்; பளியன்குடி பாதையை தொடர் ஆய்வு செய்தும் பயனில்லை

கூடலுார்,: கூடலுார் அருகே தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு பளியன்குடி வழியாக இந்த ஆண்டும் ரோடு அமைக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துார தமிழக வனப் பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி.மீ., தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் இங்கு விழா கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளாவின் அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமாக நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயில் கட்டுப்பாடு முழுவதையும் தங்களது வசம் கொண்டு வருவதற்கான திட்டத்தை கேரளா செயல்படுத்தி வருகிறது.
கெடுபிடி
கோயிலின் முகப்பு வாயில் தேனி மாவட்டத்தை நோக்கிய அமைந்துள்ளது. 1817 ல் பழமையான கிழக்கு இந்திய கம்பெனி சர்வேயும்,1893, 1896 ல் நடத்திய சர்வேயிலும், 1913, 1915ல் வெளியிட்ட எல்லைக்காட்டும் வரைபடங்களிலும் கோயில் தமிழக வனப்பகுதியிலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்வு என்ன
தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறைசித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படுகிறது.
அந்த நேரத்திலும் கேரள வனப்பகுதி வழியாக பக்தர்கள் அதிகம் செல்வதால் கேரள வனத்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்து தமிழக பக்தர்களை புண்படுத்தி வருகிறது.
தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து வாகனங்கள் செல்வதற்கான ரோடு அமைப்பதே தீர்வு என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பக்தர்கள் கூறியதாவது:
தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் ரோடு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சீரமைக்காமல் இருந்ததால் நடைபாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கோயில் வரை ரோடு அமைக்க தமிழக அரசால் சர்வே மேற்கொள்ளப்பட்டது. தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்பணி முடக்கப்பட்டது. சமீபத்திலும் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே பணிகள் நடந்தன. ரோடு அமைக்க பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ., தூரமும் உள்ளது.
தொடர் சர்வே நடந்த நிலையில் இந்த ஆண்டு ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் ஏமாற்றமே.
ரோடு அமைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தினால் மட்டுமே தமிழக பக்தர்கள் கேரளாவின் கெடுபிடிகளும் இன்றி மாதந்தோறும் கண்ணகி அம்மனை வழிபட முடியும் என்றனர்.