விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவுகுண்டுமல்லி கிலோ ரூ.320க்கு விற்பனை

ப.வேலுார்:-விளைச்சல் அதிகரிப்பால், ஏல சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிவடைந்து விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா பகுதியில் உள்ள சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்களை, விவசாயிகள்
அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இவற்றை தினந்தோறும் அறுவடை செய்யும் விவசாயிகள், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு கொண்டுவந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

தற்போது, கோடை வெயில் கொளுத்தி வருவதால், பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.


இதனால் ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம், ஒரு கிலோ குண்டுமல்லி, 600 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 320 ரூபாய்க்கும்; 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற அரளி, 80 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 150 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்த விலை, பராமரிப்பு செலவு, ஆட்கூலிக்கு கூட கட்டுப்படியாகாததால், பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement