தமிழகம், பீஹாரில் வெல்வோம்; அடித்து சொல்கிறார் அமித்ஷா

புதுடில்லி: ''தமிழகம், பீஹார் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களில் pro rata அடிப்படையிலான தொகுதிகள் குறையாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
குடும்ப அரசியல்
ஆங்கில தொலைக்காட்சிக்கு அமித்ஷா அளித்த பேட்டி: இஸ்லாமியர்களுடன் ஹிந்துக்கள் சேர்ந்தே இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். பிரிவினையை விரும்பியவர்கள் காங்., அரசியல்வாதிகள் தான். சாமானிய இஸ்லாமியர்கள் அல்ல. தற்போது காங்கிரஸ் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. 10 ஆண்டுகளில் குடும்ப அரசியல், பிரிவினை வாதத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்றி உள்ளோம். வளர்ச்சியை மோடி தான் கொண்டு வந்துள்ளார்.
வக்ப் சட்டம் தங்களுக்கு அநீதி இழைப்பதாக இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை. இஸ்லாமிய பெண்களுக்கு வக்ப் சட்டத்தால் வாரியத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சன்னி, முகமதிய உள்ளிட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு தற்போது வரை வக்ப் குழுவில் இடம் இருந்ததில்லை. புதிய வக்ப் சட்டத்தால் ஏக்கர்கள் கணக்கான நிலங்கள் பாதுகாக்கப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு
வக்ப் மசோதா மீது பார்லிமென்டில் பிரியங்கா ஓட்டளிக்கவில்லை. இவ்வளவு கூறுபவர்கள் பார்லிமென்டில் செயலாற்ற மறுக்கிறார்கள். மசோதா மீதான விவாதத்தில் 50 சதவீதம் நேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும் அதில் ராகுல் பேசவில்லை. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடக்கிறது.
வாக்கு வங்கி
தமிழகத்தில் செய்துள்ள ஊழலை மறைக்க மறுசீரமைப்பு குறித்து பேசி வருகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களில் pro rata அடிப்படையிலான தொகுதிகள் குறையாது. 'இண்டி' கூட்டணி உள்ள மற்ற மாநிலங்களில் எந்த பிரச்னையும் எழவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தற்பொழுது வரை கொண்டு வரப்படவில்லை. வாக்கு வங்கிக்காக தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.
ஊழலை மறைக்க நாடகம்
ஸ்டாலின் அரசு செய்துள்ள ஊழலை மறைப்பதற்கான தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடகம் நடத்துகிறது. 2026ல் தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி வெல்லும். பீஹார் தேர்தலிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறுவோம். நான் ஹிந்திவாசி அல்ல; குஜராத்தி.
இந்தியாவினுடைய மொழிகளுக்காக தான் நான் பேசுகிறேன். யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் தமிழ், மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளை கொண்டு வந்தது பா.ஜ., அரசு தான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டது. தி.மு.க.,வில் ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது.
நக்சலிசம் ஒழிக்கப்படும்
மத்திய அரசு ஹிந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. அனைத்து மொழிகளையும் மத்திய அரசு ஒன்றாக தான் பார்க்கிறது. சி.ஏ.பி.எப்., தேர்வுகள் தற்போது 13 மொழிகளில் நடை பெறுகிறது. மார்ச் 31ம் தேதி 2026ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவரை இதுவரை முடிவு செய்யவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.










