போலீசார், வக்கீல் மோதல் சம்பவம்; உயர் நீதிமன்ற உத்தரவு தள்ளிவைப்பு
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போலீசார் - வழக்கறிஞர்கள் மோதல் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான உத்தரவை, உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, 2009ல் வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது, வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர்களை கைது செய்தபோது, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது.
கடந்த 2009, பிப்ரவரியில் நடந்த இந்த மோதலில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என, பலர் தாக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. 2010ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ரஜினிகாந்த் உட்பட 28 வழக்கறிஞர்களும், நான்கு போலீஸ் அதிகாரிகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி எம்.நிர்மல்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன், ''கடந்த 16 ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் போலீசார். எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' எனக் கூறி, எழுத்துப்பூர்வமான வாதங்களையும் தாக்கல் செய்தார்.
அதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தின் அனைத்து நிகழ்வுகளையும், தானும் ஒரு வழக்கறிஞராக இருந்து நேரில் பார்வையிட்டதாகக் கூறிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
மேலும்
-
குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்படும் இறைச்சி கழிவுகள்! ஆய்வு செய்யுமா மாசு கட்டுப்பாடு வாரியம்
-
தமிழக போலீசாருக்கு சத்குரு நன்றி
-
பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' திட்டம்
-
ஹொரமாவு மெயின் ரோட்டில் 15 நாளாக வழிந்தோடும் கழிவுநீர்
-
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
-
புதிய கட்டடத்தில் தம்பதி மர்ம சாவு